பத்துக் கட்டளைகளும் பலியும்

Fellowship

நாம் முந்தைய சந்திப்பிற்குப் பின் உங்களுக்கு நடந்தவற்றில் எவற்றிற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?
இந்த வாரம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது எது, மேலும் நிலைமை சீராவதற்கு உங்களுக்கு என்ன தேவை?
உங்கள் சமூகத்தில் உள்ள மக்களின் தேவைகள் என்ன, மேலும் நாம் பகிர்ந்துகொண்ட தேவைகளைச் சந்திக்க ஒருவருக்கொருவர் எப்படி உதவ முடியும்?
நாம் கடந்த முறை சந்தித்தபோது பார்த்த சம்பவம் என்ன? கடவுளையும் மக்களையும் பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
நமது கடந்த கூட்டத்தில் நீங்கள் கற்றுக்கொண்டதை கடைப்பிடிக்க முடிவு செய்தீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள், அது எப்படி இருந்தது?
கடந்த கதையிலிருந்து நீங்கள் யாருடன் எதையாவது பகிர்ந்து கொண்டீர்கள்? அவர்கள் எப்படி பதிலளித்தார்கள்?
நாம் கடைசியாகச் சந்தித்தபோது பல தேவைகளைக் கண்டறிந்து, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டோம். அது எப்படி நடந்தது?
இப்போது, தேவனிடமிருந்து இன்றைய கதையை வாசிப்போம்...

யாத்திராகமம் 20: 1-17

¹ இறைவன் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் பேசினார்: ² “அடிமைத்தன நாடாகிய எகிப்திலிருந்து உன்னை வெளியே அழைத்துக்கொண்டுவந்த உன் இறைவனாகிய யெகோவா நானே. ³ “நீ என்னைத்தவிர வேறு தெய்வங்களை உனக்காக வைத்திருக்காதே. நீ உனக்காக ஒரு விக்கிரகத்தைச் செய்யாதே. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உள்ள எதனுடைய உருவத்திலும் விக்கிரகத்தைச் செய்யாதே. நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம். ஏனெனில், உன் இறைவனான யெகோவாவாகிய நான் எனக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன். என்னை வெறுக்கிறவர்கள் மத்தியில் பெற்றோரின் பாவத்திற்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கிறவராயும் இருக்கிறேன். ஆனால் என்னிடம் அன்பாயிருந்து, என் கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கோ, ஆயிரம் தலைமுறைகளுக்கும் அன்பு காட்டுகிறவராயும் இருக்கிறேன். உன் இறைவனாகிய யெகோவாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், யெகோவா தனது பெயரை தவறாகப் பயன்படுத்துகிற ஒருவனையும் தண்டிக்காமல் விடுவதில்லை. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய்க் கைக்கொள்ளும்படி அதை நினைவில் வைத்துக்கொள். ஆறு நாட்களும் உழைத்து உன் வேலையை எல்லாம் செய்யவேண்டும். ¹⁰ ஏழாம்நாளோ உன் இறைவனாகிய யெகோவாவின் ஓய்வுநாள். அந்த நாளில் நீ எந்த வேலையையும் செய்யக்கூடாது, நீயோ, உன் மகனோ, உன் மகளோ, உன் வேலைக்காரனோ, வேலைக்காரியோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. உன் மிருகங்களோ, உன் பட்டணங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ எந்த வேலையும் செய்யக்கூடாது. ¹¹ ஏனெனில், யெகோவா வானத்தையும் பூமியையும், கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் படைத்தார். ஏழாம் நாளிலோ அவர் ஓய்ந்திருந்தார். அதனால் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். ¹² உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு. அப்பொழுது உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் நாட்டிலே நீ நீடித்து வாழ்வாய். ¹³ கொலைசெய்ய வேண்டாம். ¹⁴ விபசாரம் செய்யவேண்டாம். ¹⁵ களவு செய்யவேண்டாம். ¹⁶ உன் அயலானுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்லாதே. ¹⁷ உன் அயலானுடைய வீட்டை அபகரிக்க ஆசைகொள்ளாதே. உன் அயலானின் மனைவியையோ, அவனுடைய வேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடைய எருதையோ, கழுதையையோ, அவனுக்குரிய எதையும் அபகரிக்க ஆசைகொள்ளாதே.”

லேவியராகமம் 6: 1-7

¹ யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: ² “யாராவது ஒருவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளையோ அல்லது அவனுடைய கவனிப்பில் விடப்பட்ட பொருளையோ வஞ்சிப்பதினாலாவது, திருடுவதினாலாவது, அவனை ஏமாற்றுவதினாலாவது தன் அயலானுக்கு எதிராகப் பாவஞ்செய்து, யெகோவாவுக்கு உண்மையற்றவனாயிருக்கக்கூடும். ³ அல்லது அவன் தொலைந்த பொருட்களைக் கண்டெடுத்தும் அதைக் குறித்துப் பொய் சொல்வதினாலாவது, பொய்யாய் சத்தியம் செய்வதினாலாவது, மக்கள் செய்யக்கூடிய இப்படியான எந்த ஒரு பாவத்தையும் அவன் செய்வதினால் யெகோவாவுக்கு உண்மையற்றவனாய் இருக்கக்கூடும். இவ்வாறு அவன் பாவங்களைச் செய்து குற்றவாளியாகிறான். அவன் தான் திருடியதையோ அல்லது பலவந்தமாய் எடுத்துக்கொண்டதையோ அல்லது தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டதையோ அல்லது தான் கண்டெடுத்த தொலைந்த பொருளையோ அல்லது அவன் பொய்யாய் சத்தியம் செய்துகொண்ட எதையுமோ அவன் கட்டாயமாக திருப்பிக் கொடுக்கவேண்டும். அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கையும், அதனுடன் சேர்த்துத் தன் குற்றநிவாரண பலியைச் செலுத்தும் நாளில், அதன் சொந்தக்காரனுக்கு அது முழுவதையும் ஒப்படைக்கவேண்டும். தனக்கான தண்டனையாக தன் குற்றநிவாரண காணிக்கையை ஆசாரியனிடத்தில், அதாவது யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட அந்தச் செம்மறியாட்டுக் கடா உரிய மதிப்பு உடையதாகவும் குறைபாடு அற்றதாகவும் இருக்கவேண்டும். இவ்விதம் ஆசாரியன் யெகோவாவுக்கு முன்பாக அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது எவைகளைச் செய்து அவன் குற்றவாளியானானோ அவைகளினின்று அவன் மன்னிக்கப்படுவான்.”

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.

Application

இப்போது, இந்தப் பகுதியை இதுவரை கேட்டிராத ஒரு நண்பரிடம் சொல்வது போல, யாராவது தங்களின் சொந்த வார்த்தைகளில் மீண்டும் சொல்லட்டும். அவர்கள் எதையாவது விட்டுவிட்டாலோ அல்லது தவறுதலாக எதையாவது சேர்த்தாலோ அவர்களுக்கு உதவுவோம். அப்படி நடந்தால், "வேதபகுதியில் அதை எங்கே காண்கிறீர்கள்?" என்று நாம் கேட்கலாம்.
கடவுளைப் பற்றியும், அவருடைய குணத்தைப் பற்றியும், அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றியும் இந்தப் பகுதி நமக்கு என்ன போதிக்கிறது?
இந்தச் சரிதையிலிருந்து, நம்மைப் போன்ற மக்களைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
இந்தக் சம்பவத்திலிருந்து வரும் கடவுளின் உண்மையை இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துவீர்கள்? நீங்கள் செய்யப்போகும் ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது விஷயம் என்ன?
நாம் மீண்டும் சந்திப்பதற்கு முன்பு, இந்தச் சம்பவத்திலிருந்து ஒரு உண்மையை யாருடன் பகிர்ந்துகொள்வீர்கள்? நம்மைப் போலவே இந்தச் செயலியில் கடவுளுடைய வார்த்தையைக் கண்டறிய விரும்பும் மற்றவர்களையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
நமது சந்திப்பு முடிவடையும் நிலையில், நாம் மீண்டும் எப்போது சந்திப்பது என்றும், நமது அடுத்த சந்திப்பை யார் நடத்துவார் என்றும் முடிவு செய்வோம்.
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று சொன்னதைக் குறித்துக் கொள்ளவும். நாம் மீண்டும் சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவத்தை மீண்டும் படிக்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். இந்த சம்பவத்தின் எழுத்துப்பிரதி அல்லது ஆடியோ யாரிடமாவது இல்லையென்றால், வழிநடத்துபவர் அதைப் பகிர்ந்து கொள்வார். நாம் புறப்பட்டுச் செல்லும்போது, நமக்கு உதவுமாறு கர்த்தரிடம் கேட்போம்.

0:00

0:00