கடவுள் காணாமற்போனவர்களைத் தேடுகிறார்

Fellowship

நாம் முந்தைய சந்திப்பிற்குப் பின் உங்களுக்கு நடந்தவற்றில் எவற்றிற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?
இந்த வாரம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது எது, மேலும் நிலைமை சீராவதற்கு உங்களுக்கு என்ன தேவை?
உங்கள் சமூகத்தில் உள்ள மக்களின் தேவைகள் என்ன, மேலும் நாம் பகிர்ந்துகொண்ட தேவைகளைச் சந்திக்க ஒருவருக்கொருவர் எப்படி உதவ முடியும்?
நாம் கடந்த முறை சந்தித்தபோது பார்த்த சம்பவம் என்ன? கடவுளையும் மக்களையும் பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
நமது கடந்த கூட்டத்தில் நீங்கள் கற்றுக்கொண்டதை கடைப்பிடிக்க முடிவு செய்தீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள், அது எப்படி இருந்தது?
கடந்த கதையிலிருந்து நீங்கள் யாருடன் எதையாவது பகிர்ந்து கொண்டீர்கள்? அவர்கள் எப்படி பதிலளித்தார்கள்?
நாம் கடைசியாகச் சந்தித்தபோது பல தேவைகளைக் கண்டறிந்து, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டோம். அது எப்படி நடந்தது?
இப்போது, தேவனிடமிருந்து இன்றைய கதையை வாசிப்போம்...

லூக்கா 15: 1-24

¹ இயேசு சொல்வதைக் கேட்பதற்காக அநேக வரி வசூலிப்போரும், பாவிகளும் அவரைச் சுற்றிக் கூடியிருந்தார்கள். ² அப்பொழுது பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரும், “இவன் பாவிகளை வரவேற்று, அவர்களுடன் சாப்பிடுகிறான்” என்று முறுமுறுத்தார்கள். ³ அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களில் ஒருவனிடம் நூறு ஆடுகள் இருந்து, அவற்றில் ஒன்று காணாமல் போனால், அவன் தனது தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பத்திரமான இடத்தில் விட்டுவிட்டு, காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும், அதைத் தேடிப்போவான் அல்லவா? அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, மகிழ்ச்சியுடன் தனது தோளில் போட்டுக்கொண்டு, தன் வீட்டுக்கு வருவான். பின்பு அவன் தன்னுடைய நண்பர்களையும், அயலவர்களையும் கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியடையுங்கள்; காணாமல் போன எனது ஆட்டை நான் கண்டுபிடித்து விட்டேன்’ என்று சொல்வான். அவ்விதமாகவே மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து பரலோகத்திலே அதிக மகிழ்ச்சி உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். “ஒரு பெண்ணிடம், பத்து வெள்ளி நாணயங்கள் இருந்து, அதில் ஒன்று காணாமல் போனால், அவள் அதைக்கண்டுபிடிக்கும் வரைக்கும், ஒரு விளக்கைக் கொளுத்தி, வீட்டைக் கூட்டி, கவனமாய் தேடாமல் இருப்பாளோ? அவள் அதைக் கண்டெடுக்கும்போது, தனது சிநேகிதிகளையும், அயலவர்களையும் கூடிவரும்படி கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; காணாமல் போன எனது நாணயத்தை நான் கண்டுபிடித்தேன்’ என்று சொல்வாள் அல்லவா? ¹⁰ அவ்விதமாகவே மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து, இறைவனுடைய தூதரின் முன்னிலையில் பெருமகிழ்ச்சி உண்டாகும்” என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். ¹¹ இயேசு தொடர்ந்து சொன்னதாவது: “ஒருவனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். ¹² அவர்களில் இளையவன் தனது தகப்பனிடம், ‘அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கைத் தாரும்’ என்று கேட்டான். எனவே தகப்பன், தனது சொத்தை இரண்டுபேர்களுக்கும் இடையில் பிரித்துக்கொடுத்தான். ¹³ “சில நாட்களுக்குள்ளாகவே, இளையமகன் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரமாயுள்ள ஒரு நாட்டிற்குப் போனான். அவன் அங்கே, துன்மார்க்கமான வாழ்க்கையை வாழ்ந்து, தனது செல்வத்தையெல்லாம் வீணாக செலவுசெய்து அழித்துப்போட்டான். ¹⁴ அவன் எல்லாவற்றையும் செலவுசெய்து முடித்தபின், அந்த நாடு முழுவதிலும் ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது; அதனால், அவனுக்கு வறுமை ஏற்படத் தொடங்கியது. ¹⁵ எனவே, அவன் அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவனிடம் போய், கூலிக்கு அமர்ந்தான். அங்கு அவன், பன்றிகளை மேய்க்கும்படி வயலுக்கு அனுப்பப்பட்டான். ¹⁶ அப்பொழுது அவன், பன்றிகள் தின்கின்ற தவிட்டினாலேயே தனது வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான். ஆனால், ஒருவரும் அவனுக்கு அதையும் கொடுக்கவில்லை. ¹⁷ “அவனது புத்தி தெளிவடைந்தபோது, ‘எனது தகப்பனிடம் இருக்கும் கூலிக்காரர்களில் எத்தனையோ பேர், உணவைத் தாராளமாய்ப் பெற்றுக்கொள்கிறார்கள். நானோ, இங்கே பட்டினியில் சாகிறேன். ¹⁸ நான் புறப்பட்டு என் தகப்பனிடத்திற்குத் திரும்பிப்போய், அவரிடம்: அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். ¹⁹ நான் இனிமேலும் உம்முடைய மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவன் அல்ல; என்னை உமது கூலிக்காரர்களில் ஒருவனாக வைத்துக்கொள்ளும் எனச் சொல்வேன்’ என்று சொல்லிக்கொண்டான். ²⁰ எனவே, அவன் எழுந்து தன் தகப்பனிடத்திற்குப் போனான். “அவன் வெகுதூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருக்கம் கொண்டான்; தகப்பன் ஓடிப்போய், தனது மகனைக் கைகளால் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். ²¹ “மகனோ தன் தகப்பனிடம், ‘அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். இனிமேலும், உமது மகன் என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன்’ என்றான். ²² “ஆனால் அவனுடைய தகப்பனோ, தனது வேலைக்காரரைப் பார்த்து, ‘விரைவாய் போங்கள், முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து, அதை இவனுக்கு உடுத்துங்கள். இவனுடைய கை விரலிலே மோதிரத்தையும் காலுக்கு பாதரட்சையையும் போடுங்கள். ²³ மிக சிறப்பான விருந்தை உடனே ஆயத்தப்படுத்துங்கள். நாம் விருந்துண்டு கொண்டாடுவோம். ²⁴ ஏனெனில், எனது மகனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுதோ, மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறான். நான் இவனை இழந்து போயிருந்தேன்; இப்பொழுதோ, எனக்கு இவன் கிடைத்துவிட்டான்,’ என்றான். எனவே, அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.

Application

இப்போது, இந்தப் பகுதியை இதுவரை கேட்டிராத ஒரு நண்பரிடம் சொல்வது போல, யாராவது தங்களின் சொந்த வார்த்தைகளில் மீண்டும் சொல்லட்டும். அவர்கள் எதையாவது விட்டுவிட்டாலோ அல்லது தவறுதலாக எதையாவது சேர்த்தாலோ அவர்களுக்கு உதவுவோம். அப்படி நடந்தால், "வேதபகுதியில் அதை எங்கே காண்கிறீர்கள்?" என்று நாம் கேட்கலாம்.
கடவுளைப் பற்றியும், அவருடைய குணத்தைப் பற்றியும், அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றியும் இந்தப் பகுதி நமக்கு என்ன போதிக்கிறது?
இந்தச் சரிதையிலிருந்து, நம்மைப் போன்ற மக்களைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
இந்தக் சம்பவத்திலிருந்து வரும் கடவுளின் உண்மையை இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துவீர்கள்? நீங்கள் செய்யப்போகும் ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது விஷயம் என்ன?
நாம் மீண்டும் சந்திப்பதற்கு முன்பு, இந்தச் சம்பவத்திலிருந்து ஒரு உண்மையை யாருடன் பகிர்ந்துகொள்வீர்கள்? நம்மைப் போலவே இந்தச் செயலியில் கடவுளுடைய வார்த்தையைக் கண்டறிய விரும்பும் மற்றவர்களையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
நமது சந்திப்பு முடிவடையும் நிலையில், நாம் மீண்டும் எப்போது சந்திப்பது என்றும், நமது அடுத்த சந்திப்பை யார் நடத்துவார் என்றும் முடிவு செய்வோம்.
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று சொன்னதைக் குறித்துக் கொள்ளவும். நாம் மீண்டும் சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவத்தை மீண்டும் படிக்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். இந்த சம்பவத்தின் எழுத்துப்பிரதி அல்லது ஆடியோ யாரிடமாவது இல்லையென்றால், வழிநடத்துபவர் அதைப் பகிர்ந்து கொள்வார். நாம் புறப்பட்டுச் செல்லும்போது, நமக்கு உதவுமாறு கர்த்தரிடம் கேட்போம்.

0:00

0:00